கோலாலம்பூர், மே 5- தொண்டூழியப் பணிகள் மற்றும் உதவித் திட்டங்களை மேலும் ஆக்ககரமான முறையில் மேற்கொள்வதற்கு ஏதுவாக மலேசிய செம்பிறைச் சங்கத்திற்கு 30 லட்சம் வெள்ளி மானியம் வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
சமூக நலப் பணிகளை ஆற்றுவதற்கும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் களப்பணியாற்றுவதற்கும் மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சின் வாயிலாக 10 லட்சம் வெள்ளியும் நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் மூலம் 10 லட்சம் வெள்ளியும் அந்த சங்கத்திற்கு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மாநிலங்களில் உள்ள செம்பிறைச் சங்க அலுவலகங்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிகளுக்காக மேலும் பத்து லட்சம் வெள்ளி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இன்று இங்கு மலேசிய செம்பிறைச் சங்கத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்கு தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார்.