ECONOMYMEDIA STATEMENT

புக்கிட் மெலாவத்தி மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவது என்பது முதன்மை இலக்கு- தீபன் கூறுகிறார்

கோல சிலாங்கூர், ஆக 9- வரும் 12ஆம் தேதி நடைபெற இருக்கும்  தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் இத்தொகுதியில் உள்ள கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவது தனது முதன்மை இலக்காக அமையும் என்று  புக்கிட் மெலாவத்தி தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் தீபன் சுப்பிரமணியம் கூறுகிறார்.

இத்தொகுதியில் அபரிமித வாய்ப்புகளைக் கொண்டுள்ள விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறையின் மூலம் வட்டார மக்களின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்று அவர் சொன்னார்.

நான் கிராமங்களுக்கு அதிகம் வருகை புரிய விருக்கிறேன். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பிரச்சனைகள் மற்றும் அவர்களின் பாரம்பரியத்தை அறிந்து கொள்வதற்கு இந்த களப்பயணம் பெரிதும் துணை புரியும் என்று  அவர் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை உயர்த்துவது எனது முதன்மை இலக்காக உள்ளது. இவ்வட்டார மக்களின் சமூக பொருளதார நடவடிக்கைகளை உயர்த்துவதில் நான் தீவிர கவனம் செலுத்த விருக்கிறேன். இப்பகுதி மக்களில் பெரும்பாலோர் வேளாண் பொருள்கள், ஆறு மற்றும் கடல் உணவுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தையே பெரிதும் நம்பியுள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

புக்கிட் மெலாவத்தி தொகுதியை சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்குரிய வாய்ப்பு அதிகம் உள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டு பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படும் மேற்கு கரையோர நெடுஞ்சாலைத் திட்டம் இந்த முன்னெடுப்புக்கு மேலும் வலு சேர்க்கும் என்றார் அவர்.

பண்டார் மெலாவத்தியை பிரசித்திச் பெற்ற சுற்றுலா நகரமாக மேம்படுத்துவது எனது பிரதான இலக்காக உள்ளது. இங்கு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான  வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உதாரணத்திற்கு கடல், குன்று, ஆறு என அனைத்து இயற்கை அழகுகளும் இங்கு உள்ளன என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :