கோலாலம்பூர், டிச.21- நாடு முழுவதும் உள்ள சுகாதார கிளினிக்குகளில் மொத்தம் 234 தடுப்பூசி மையங்கள் (பிபிவி) திறக்கப்பட்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூள்கிப்ளி அகமது தெரிவித்தார்.
தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு அல்லது மாற்றங்கள் இருந்தால் அது குறித்த தகவலை சுகாதார அமைச்சு அவ்வப்போது வெளியிடும் என்று அவர் கூறினார்.
கோவிட்-19 தடுப்பூசி ஊசியைப் பெற விரும்புவோர் தடுப்பூசி மையங்களுக்கு நேரில் வரலாம். அல்லது முந்தைய தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தில் (பிக்) பின்பற்றப்பட்ட நடைமுறைகளின்படி மக்கள் மைசெஜாத்ரா செயலி வாயிலாக வருகைக்கான முன்பதிவை செய்யலாம் செய்யலாம் என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 தடுப்பூசியை எடுத்துக்கொள்வது என்பது தற்போதைக்கு சுய விருப்பத்திற்குட் பட்டது என்பதை சுகாதார அமைச்சு வலியுறுத்த விரும்புகிறது. ஆயினும், மூத்த குடிமக்கள் குறிப்பாக, ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை பெறுவது ஊக்குவிக்கப் படுகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
இந்த நாட்டில் கிடைக்கும் கோவிட்-19 தடுப்பூசி நோய்த் தொற்றால் ஏற்படும் கடுமையான பாதிப்பிலிருந்து பாதுகாப்பதில் ஆக்ககரமானப் பயனைத் தரும் என்றும் ஜூல்கிப்ளி தெரிவித்தார்.