ஷா ஆலம், ஜன 1- கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை 270 கோடி வெள்ளியை சிலாங்கூர் வருமானமாகப் பெற்றது. இது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாகும்.
சபாக் பெர்ணம் வட்டார மேம்பாட்டுத் திட்டத்தை (சாப்டா) தொடர்ந்து முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் வாயிலாக மாநிலத்தின் பொருளாதாரம் விரிவாக்கம் கண்டு வருகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டு பிரதேசம் (இட்ரிஸ்), கெர்பாங் மெரிடைம் சிலாங்கூர் (எஸ்.எம்.ஜி.) மற்றும் கேரித் தீவு மேம்பாடு ஆகியவையும் முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் உள்ளடங்கும் என்ற மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்திற்கு பெருமையளிக்கக் கூடிய மற்றும் மக்களின் வாழ்க்கையில் மேம்பாட்டைக் கொண்டு வரக்கூடிய வகையிலான அடைவுநிலை மற்றும் நிகழ்வுகளை நாம் கடந்த 2023ஆம் ஆண்டில் கண்டோம்.
இது உண்மையில் நாம் அனைவரின் பங்களிப்பு என்பதோடு நாம் அனைவருக்கமான வெற்றியாகும் என்று அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்ட்டுள்ளார்.
கடந்தாண்டில் 200 கோடி வெள்ளியை வருமானமாக ஈட்ட மாநில அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. அதில் நில பிரீமியம் வாயிலாக 75 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி அல்லது மொத்த வருமானத்தில் 38 விழுக்காடு தொகை பெறப்பட்டது என்றார் அவர்.
இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐ.எஸ்.பி.) திட்டத்தின் வாயிலாக மாநில மக்கள் பல்வேறு அனுகூலங்களைப் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. அதில் அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவான விலையில் விற்பனை செய்யும் ஏஹ்சான் ரஹ்மா திட்டமும் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.