ஷா ஆலம், ஜன 6- இங்குள்ள கம்போங் ஜாலான் கெபுனில் உள்ள மறுசுழற்சி தொழிற்சாலையில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் நான்கு பெண்கள் உட்பட சுமார் 100 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை 5.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் கட்டாய உடலுழைப்புத் தொழிலாளியாகப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு மியான்மர் இளைஞனும் வெற்றிகரமாக மீட்கப்பட்டார்.
பயன்படுத்தப்பட்ட மின்னியல் பொருட்களை மறுசுழற்சி செய்யும் பணிக்கு சீன நாட்டவர்களுக்கு வாடகைக்கு விட்ட சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் என்று நம்பப்படும் 60 வயதான உள்ளூர் நபரும் கைது செய்யப்பட்டார்.
அந்த தொழிற்சாலைக்கு வணிக உரிமம் இல்லை என்பதும் ஓராண்டுக்கும் மேலாக இயங்கி வருவதும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட அனைவரும் 18 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களாவர். அவர்களில் 61 வங்காளதேசிகள், 19 சீனர்கள் 29 மியான்மர் நாட்டினர், இரு நேப்பாளிகள் மற்றும் 8 கம்போடியர்களும் அடங்குவர்