ஷா ஆலம், பிப். 17 – ஆசிய அணி நிலையிலான பூப்பந்துப் சாம்பியன்ஷிப் 2024 (பி.ஏ.டி.சி.) போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வானதன் அடிப்படையில் தேசிய ஆண்கள் அணி 2024 தாமஸ் கிண்ணப் போட்டிக்கு தகுதியின் அடிப்படையில் தேர்வு பெற்றுள்ளது.
நடப்பு சாம்பியனான மலேசியா இங்குள்ள செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் நடந்த காலிறுதிப் போட்டியில் சிங்கப்பூரை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. எனினும், ஆடவர் ஒற்றையர் ஆட்டக்காரர் இங் ட்ஸி யோங்கிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக சாதனை முயற்சி சிதைந்தது.
முதல் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய 23 வயதான அவர், ஏற்கனவே முதுகில் ஏற்பட்ட காயம் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தியதால் முதல் சுற்றில் ஜேசன் தேவிடம் 1-3 என்ற புள்ளிக் கணக்கில் பின்தங்கியிருந்தபோது ஆட்டத்தைக் கைவிட்டு களத்திலிருந்து வெளியேறினார்.
எனினும், சற்றும் மனம் தளராத மலேசியா 21-11, 22-24, 21-14 என்ற செட் கணக்கில் லோ கீன்-ஹோவின் வோங் ஜியா ஹாவோவை வீழ்த்தி 1-1 என்ற புள்ளிக் கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தது.
லியோங் ஜுன் ஹாவ் 31 நிமிடங்களில் ஜோயல் கோவை 21-8, 21-12 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக வீழ்த்தி இரண்டாவது வெற்றியை உறுதிசெய்தார். அதற்கு முன்னர் கோ ஸீ ஃபெய்-நூர் இசுடின் முகமது ரும்சானி ஜோடி இரண்டாவது இரட்டையர் பிரிவில் கடும் போராட்டத்திற்குப் பிறகு வெற்றி பெற்றனர்.
இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் மலேசியா ஜப்பானை எதிர்கொள்கிறது.
2024 ஆண்டு தோமஸ் கிண்ண இறுதிப் போட்டிகள் சீனாவின் செங்டுவில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.