புத்ராஜெயா, மார்ச் 24 – காசநோய் (டி.பி.) காரணமாக கடந்தாண்டு மொத்தம் 2,623 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 51 சம்பவங்கள் அல்லது இரண்டு விழுக்காடு அதிகரித்துள்ளதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது தெரிவித்தார்.
கடந்தாண்டு நாட்டில் 26,781 காச நோய்ச் சம்பவங்கள் பதிவானதாக இன்று அனுசரிக்கப்படும் உலக காசநோய் தினத்தை அவர் வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டின் இதே காலப் பகுதியில் பதிவான 25,391 காச நோய்ச் சம்பவங்களுடன் ஒப்பிடும்போது இது 1,390 சம்பவங்கள் அல்லது 5.47 விழுக்கடு அதிகமாகும் என அவர் கூறினார்.
மலேசியாவில் பெரும் சுமையளிக்கக்கூடிய நோயாக காசநோய் தொடர்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்கள் கவலையளிக்கும் வகையில் உள்ளதோடு இது மலேசிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மோசமாக பாதிக்கிறது என்று அவர் சொன்னார்.
காசநோயை குணப்படுத்தும் சிகிச்சைகள் கிடைப்பதால் தொடக்கத்திலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சையைக் தொடங்குவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
காசநோய் என்பது மைக்கோபாக்டீரியம் காசநோயால் காற்றில் பரவும் ஒருவகை தொற்று நோயாகும். இது முதன்மையாக நுரையீரலை (நுரையீரல் காசநோய்) பாதிக்கிறது. இது தவிர, மூளை (மூளையழற்சி காசநோய்), முதுகெலும்பு (முதுகெலும்பு காசநோய்), நிணநீர் முனைகள் (நிணநீர் முனை காசநோய்), வயிறு (அடிவயிற்று காசநோய்), தொற்றுகளும் ஏற்படலாம்.
என்றார் அவர்.
காச நோய்க்கான அறிகுறிகளில் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல், காய்ச்சல், இரவில் வியர்த்தல், பசியின்மை, எடை இழப்பு மற்றும் இரத்தம் இருமல் ஆகியவை அடங்கும்.
காசநோய் அறிகுறிகளைச் சூழ்ந்திருக்கும் சூனியம், மாந்திரீகம் அல்லது பரம்பரை நோய்கள் போன்றவற்றை தவறான எண்ணங்களை அகற்ற வேண்டும். நோய்க்கான அறிகுறிகளை கொண்ட நபர்கள் உடனடியாக அருகிலுள்ள சுகாதார கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் பரிசோதனை மற்றும் சிகிச்சையைப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.