கோலாலம்பூர், ஜூன் 2- தலைநகரில் நேற்று மாலை சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பெய்த அடை மழையின் காரணமாக பண்டார் பாரு செந்தூலில் உள்ள ஒரு வீட்டின் மீது மரம் விழுந்து கூரை சேதமடைந்தது.
பண்டார் பாரு செந்தூல், ஜாலான் 2/48ஏ சாலையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிருடற் சேதம் ஏற்படவில்லை என்று கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மையம் அறிக்கை ஒன்றில் கூறியது.
தலைநகர் ஜாலான் கியாரா 1, மோண்ட் கியாராவிலும் சாலையில் மரம் விழுந்ததாகவும் எனினும், இச்சம்பவத்தில் பொது மக்களுக்கு அல்லது வாகனங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அது தெரிவித்தது.
முன்னதாக, கடும் மழையில் பகாங் சாலை சந்திப்பு அருகே மரம் விழுந்த காரணத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பெர்னாமா முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.