புத்ராஜெயா, ஏப்ரல் 15:
இந்த ஆண்டு ஆரம்பப்பள்ளி மதிப்பீட்டு சோதனை (யு.பி.எஸ்.ஆர்.) மற்றும் படிவம் 3 மதிப்பீடு (பிடி3) ஆகிய அரசாங்கத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரிடமும் கலந்து பேசிய பிறகு அமைச்சரவை இந்த முடிவை எடுத்திருக்கிறது என மூத்த அமைச்சர் (கல்வி) டாக்டர் முகமட் ராட்ஸி முகமட் ஜிடின் இன்று புத்ராஜெயாவில் அறிவித்தார்.
நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு, கல்வி அமர்வு நிறுத்தப்பட்டதன் காரணமான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முகமட் ராட்ஸி தெரிவித்தார். இருப்பினும், இந்த ஆண்டின் ஆறாம் வகுப்பு மற்றும் மூன்றாம் படிவ மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிடுவதற்கு ஒரு புதிய வழிமுறையை கல்வி அமைச்சு பிறகு அறிவிக்கும் என்றார். மேலும் பள்ளிகள் திறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே பொது அறிவிப்பு செய்யப்படும் என உறுதி அளித்தார்.
இதனிடையே, இந்த ஆண்டிற்கான எஸ்பிஎம் மற்றும் எஸ்விஎம் தேர்வுகள் 2021 முதல் கால் ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் செய்தியாளர்களிடம் பேசினார். அது மட்டுமல்லாமல், எஸ்டிபிஎம் இரண்டாம் செமஸ்டர் தேர்வு ஆகஸ்ட் 2020-க்கு தள்ளிவைத்த நிலையில் செமஸ்டர் மூன்றிற்கான தேர்வு 2021-இன் முதல் கால் ஆண்டில் நடத்தப்படும் என்று அமைச்சர் மேலும் விவரித்தார்.