13வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய முன்னணியின் தலைவர் என்ற முறையில் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்ததை அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்று வரை, 14வது பொதுத் தேர்தல் நெருங்கி வந்த பின்னரும் வாக்குறுதிகள் வெறும் கானல் நீராகவே தெரிகிறது.
மலேசிய நாட்டு மக்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதில் பின்வரும் அடிப்படை வாக்குறுதிகள்:-
1. மக்கள் வாங்கமுடிந்த வீடுகள் நிர்மாணிப்பு:
அண்மையில், 2வது நிதி அமைச்சர் பேசுகையில் இளையோர் வாடகை வீடுகளை தேர்ந்தெடுக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் வீட்டின் மாத கட்டணத்தை கட்ட சிரமங்களை எதிர்நோக்குவார்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
2. தரம் மிக்க சுகாதாரச் சேவைகள்:
இந்த ஆண்டில் மலேசிய மக்களுக்கு அதிர்ச்சி தகவலாக அரசாங்க மருத்துவமனை சேவைகளின் கட்டணம் உயர்வு அமைந்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் தர வகுப்புச் சேவையாக இருந்தாலும் தரமான சேவையை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும். பல நேரங்களில் அரசாங்க மருத்துவமனைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.
3. பொது பாதுகாப்பு மற்றும் ராணுவ பலத்தை அதிகரித்தல்:
நாட்டின் அமைதியை காக்கும் காவல்துறை மற்றும் ராணுவத்தின் சேவையை நாம் மதிக்கிறோம். ஆனால், தேசிய முன்னணியின் ராணுவ பலத்தை அதிகரித்து வரும் செயல், தளவாடங்களின் மேம்பாடு, பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக சீன நாட்டின் கடற்படைக் கப்பல் சரவாக் கடற்பகுதியில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
4. மகளிர் பங்கேற்பை வலுப்படுத்தல்:
பாலின வேறுபாடுகளை எதிர் கொள்ள போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. நாட்டின் தலைமை தணிக்கையாளர் ஒரு அம்னோ தலைவரின் மனைவியாக இருந்தாலும், தொடர்ந்து வேலையிடங்களில் பாலின வேறுபாடுகள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.
5. இயற்கை வளங்களை பாதுகாத்தல்:
பாக்சிட் உலோக உற்பத்தியினால் ஏற்படும் சுற்று சூழல் பாதிப்பு, காடுகளை அழித்து பழங்குடி மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிப்பு போன்ற இயற்கை வளங்களை பேணிக் காக்கும் முயற்சிகளில் தேசிய முன்னணி தோல்வி.
தேசிய முன்னணியின் வாக்குறுதிகள் வெறும் தேர்தல் இனிப்பு பண்டங்களே. ஆக நம்மை மீண்டும் ஏமாற்றும் தேசிய முன்னணியை விட மக்களுக்கு போராட்டம் நடத்தும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி புத்ராஜெயாவை வழிநடத்த வாய்ப்பு வழங்க வேண்டும்.
* ரோஸ்ஸியா இஸ்மாயில்
பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர்
மக்கள் நீதி கட்சி