ஷா ஆலம், செப்டம்பர் 28:
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, மாநில தலைமைத்துவத்தை வழி நடத்தும் விதம் நம்பகமான முறையில் செயல்படுவதாகவும் தொடர்ந்து மாநிலத்தை ஆட்சி புரிய வேண்டும் என்று சீனார் ஹாரியான் நாளிதழின் கருத்துக்கணிப்பு கூறுகிறது. நாடு தழுவிய அளவில் 550 பேர்களிடம் ஆய்வு நடத்திய வேளையில் 301 பேர்கள் அஸ்மின் அலியை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.
சீனார் ஹாரியான் நாளிதழின் கருத்துக்கணிப்பில் 54% அஸ்மின் அலியின் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது. பல்வேறு மாசுபடுத்தும் செயல்பாடுகள் மற்றும் எதிர்மமையான கருத்துக்கள் அவர் மீது இருந்தாலும் மக்களின் ஆதரவை அஸ்மின் அலி பெற்றுள்ளது அம்னோ தேசிய முன்னணிக்கு பின்னடைவை அரசியல் ரீதியிலும் ஏற்படுத்தி உள்ளது.
” தனது பதவியை எடுத்த ஆரம்ப காலத்தில் முன்னாள் மந்திரி பெசாருடன் ஒப்பீடு செய்யப் பட்டாலும் கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவரான அஸ்மின் அலி தனது பாணியில் முற்போக்கான நடைமுறையில் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார். அரசியல் செயல்பாடுகளை குறைத்துக் கொண்டு மாநில மக்களின் நலனுக்காக கடமையாற்றி வருகிறார் என்று கூறினால் அது மிகையாகாது. பரிவு மிக்க மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தி வருவதை மக்கள் கண்கூடாக பார்க்கிறார்கள்,” என்று நாளிதழின் கருத்துக்கணிப்பு தெரிவித்து உள்ளது.
இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்தி வருவது மாநில அரசாங்கம் மக்களின் சுமையை குறைக்க உதவுவதாக பொது மக்கள் கருதுகிறார்கள் என்று ஆய்வு காட்டுகிறது.
” ‘விவேக மாநிலம்’ என்று கருபொருள் கொண்டு செயல்படும் சிலாங்கூர் மாநிலம் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து, இலவச இணையதள சேவை மற்றும் குப்பைகளை அகற்றும் நவீன செயல்பாடுகள் மாநில மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. மாநில அரசாங்க ஊழியர்களுக்கு இரண்டு மாத போனஸ் வழங்கியது, பரிவு மிக்க மக்கள் நல திட்டங்கள் மற்றும் அபரீத பொருளாதார வளர்ச்சி போன்றவை அஸ்மின் அலி மீது வாக்காளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது,” என்று சீனார் ஹாரியான் நாளிதழின் கருத்துக்கணிப்பு அறிக்கை கூறுகிறது.
சரவாக் பல்கலைக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் இணைப் பேராசிரியர் முனைவர் ஜெனிரி அமீர் அஸ்மின் அலியின் தலைமைத்துவம் மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று கருத்துரைத்தார்.
இதனிடையே, சிலாங்கூர் மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் சுஹாய்மி ஷாபியி கூறுகையில் மாநில மக்களின் பேராதரவு, மக்கள் மீது அக்கறை கொண்ட திட்டங்களை அடிப்படையாக வைத்து நேர்மையான மற்றும் வெளிப்படையாக நிர்வாகத்தை வழி நடத்தி வருவதே ஆகும் என்று கூறினார்.
#கேஜிஎஸ்