ஷா ஆலம், ஜூலை 5-
முகமது அடிப் முகமது காசிம் மரணம் மீதான விசாரணைக்கு உதவுவதற்கு மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் (யுஐடிஎம்) சேர்ந்த இயற்பியல் நிபுணர் ஒருவர் அழைக்கப்படுவார் என்று மரண விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அப்பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையின் மூத்த விரிவுரையாளர் அமீர் ரட்ஸி அப்துல் கனி இவ்வழக்கின் 30ஆவது சாட்சியாக ஜூலை 16 மற்றும்17 தேதிகளில் விளக்கமளிப்பார் என்று நீதிபதி ரோஃபியா முகமது கூறினார்.
இது குறித்து சாட்சியம் அளிப்பவருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் ஜூலை 16ஆம் தேதி நடைபெறும் விசாரணையின் போது அவர் பதிலளிப்பதற்குத் தயாராக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் ரோஃபியா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இதனிடையே, இவ்வழக்கு விசாரணையில் நோயின் காரணத்தைக் கண்டறியும் நிபுணர் ஒருவர் அழைக்கப்பட வேண்டும் என்ற இவ்விசாரணையை வழிநடத்தி வரும் அதிகாரி ஃபாதேன் ஹடினி விடுத்த கோரிக்கையை ஏற்பது குறித்து அமீர் ரட்ஸியின் விளக்கத்தைக் கேட்டறிந்த பின்னரே முடிவெடுக்கப்படும் என்று ரோஃபியா கூறினார்.