கோலாலம்பூர், டிச.11-
பிகேஆர் தலைவர் மீது மானபங்க குற்றச்சாட்டை சுமத்தியுள்ள முகமது யூசோப் ராவுத்தரின் வழக்கு குறித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட மேலும் சில சாட்சிகளையும் அரச மலேசிய போலீஸ் விசாரணைக்கு அழைக்கும்.
தேதிகள் நிர்ணயிக்கப்பட்டவுடன் இச்சாட்சிகள் யாவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு பிரிவு இயக்குநர் டத்தோ ஹூஸிர் முகமது கூறினார்.
முகமது யூசோப்பின் வாக்குமூலத்தை கடந்த திங்கள்கிழமை பதிவு செய்ததோடு அவரது சத்திய பிரமாண அறிக்கையையும் தமது தரப்பு கைப்பற்றியுள்ளதாக அவர் சொன்னார். இவ்வழக்கு குற்றவியல் சட்டப்பிரிவு 354 இன் கீழ் விசாரிக்கப்படும் என்றும் அதன் அறிக்கை பின்னர் தேசிய சட்டத்துறை அலுவலகம் உட்பட விசாரணையின் முடிவைப் பொறுத்து மேலும் சில கிளைகளுக்கும் அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கு தொடர்பில் வாக்குமூலம் அளிக்க நேற்று இரண்டாவது தடவையாக முகமது யூசோப் புக்கிட் அமானுக்கு வந்திருந்தார்.