புத்ராஜெயா, ஜனவரி 29:
அண்மை காலமாக நமது தேசத்தில் இனரீதியான பதட்டங்களை ஏற்படுத்தும் போலி செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் பரப்பப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து போலி செய்திகளை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.
நாட்டில் இன வெறுப்பைத் தூண்டுவதற்கும் வேண்டுமென்றே போலி செய்திகளை வெளியிடுவோர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று மகாதீர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை எதிர்த்து, தகவல் ஊடகங்களையும் அவர் எச்சரித்தார்.
“ தகவல் ஊடக சுதந்திரம் இந்த நாட்டில் பேணப்படுகிறது. ஆனால் அவதூறு செய்திகளை பரப்புவது அல்லது பொய் சொல்வது பொறுத்துக்கொள்ளப்படாது. அதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் குறித்து போலி செய்திகள் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாகவும், மேலும் நான்கு பேரைத் தேடுவதாகவும் அதிகாரிகள் இன்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தனர்.