புத்ராஜெயா, பிப்.18-
போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்கு விதிக்கப்படும் கட்டாய மரணத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படலாம் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார். போதைப் பொருள் குற்றங்களுக்காக விதிக்கப்படும் தண்டனை கடுமையாக இருப்பதாக சில தரப்பினர் கருதுவதால் அது சம்பந்தமான சட்டங்களை அரசாங்கம் ஆராயும் என்றார் அவர்.
“நடப்புச் சட்டத்தின்படி குறிப்பிட்ட எடை அளவு போதைப் பொருளை வத்திருப்போருக்கு விதிக்கப்படும் தண்டனை கடுமையாக இருப்பதால், சம்பந்தப்பட்ட சட்டங்களை அரசாங்கம் ஆராயும்” என்றார். சட்டத்துக்குப் புறம்பான வகையில் போதைப் பொருள் விநியோகம் மூலம் பணம் சம்பாதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதால், சம்பந்தப்பட்ட சட்டம் சிறந்த பலனைக் கொண்டு வரவில்லை என்று பலர் கருதுகின்றனர்.
போதைப் பொருள் பயனீடு அல்லது விநியோகத்தைத் தவிர்ப்பதற்கு இதர சட்டங்கள் இருப்பது கண்டறியப்பட்டால், நடப்புச் சட்டம் திருத்தப்படலாம் என்று தேசிய போதைப் பொருள் எதிர்ப்பு மாதத்தை தொடக்கி வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின் மகாதீர் தெரிவித்தார்.