ஷா ஆலம், மார்ச் 24-
தூய்மை மற்றும் துப்பிரவு பணிகளுக்காக இன்றும் நாளையும் ஷா ஆலம் முணையம் 17 மூடப்படுவதாக ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) அறிவித்தது.
கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்க தரைப் போக்குவரத்து துறையின் உத்தரவிற்கு ஏற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எம்பிஎஸ்ஏ பொது தொடர்பு பிரிவுத் தலைவர் ஷாஹ்ரின் அகமது கூறினார்.
இன்று காலை 10 மணிக்கு எம்பிஎஸ்ஏவின் 10 பணியாளர்கள் சுற்றுச் சூழல் சுகாதாரப் பிரிவு பணியாளர்களுடன் இணைந்து இம்முணையத்தின் சூரான், பயணிகள் காத்திருக்கும் பகுதி, வேலி, கதவுகள் மற்றும் தண்ணீர் தொட்டில் ஆகியவற்றில் கிருமி ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்கினர் என்றார் அவர்.
“நாம் சுகாதாரத்திற்கு அதிக முக்கியதுவம், கொடுப்பதால் இப்பகுதி தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்” என்று அவர் சொன்னார்.
இதனிடையே, நடமாட்ட கட்டுபாடு குறித்த ஆகக் கடைசியான தகவல்களை அறிந்து கொள்ள விரும்பும் இங்குள்ள மக்களுக்காக கோவிட்-19 நடவடிக்கை அறை ஒன்றையும் திறந்துள்ளோம் என்று ஷாஹ்ரின் தெரிவித்தார்.