NATIONAL

தேர்தல் முடிவு மக்களின் வெற்றி – நம்பிக்கையான நாட்டை உருவாக்குவோம்!!

ஷா ஆலாம்,மே11:

நாட்டின் 14வது பொதுத் தேர்தலின் வெற்றின் மக்களின் மகத்தான வெற்றி என அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுராய்டா கமாரூடின் வர்ணித்தார்.

நாட்டின் மக்களின் நீண்டக்கால கனவு இப்போதுதான் நிறைவேறியுள்ளது.நேர்மையாகவும் நியாயமாகவும் ஆட்சி செய்ய வேண்டும்.அதற்கு ஒப்ப அரசு அமைய வேண்டும் எனும் மக்களின் கனவு நினைவாகியிருக்கும் நிலையில் நாட்டு மக்களின் 20 ஆண்டுகால மறுமலர்ச்சி போராட்டம் அதன் உச்சத்தையும் எட்டியிருப்பதாக அவர் கூறினார்.

மக்கள் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாய் அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் திட்டங்களும் மக்களுக்கானதாகவே இருத்தல் வேண்டும்.மக்களின் உணர்விற்கும் தேவைக்கும் ஏற்ப நாட்டை வழிநடத்தல் அவசியம் என்றும் அவர் கூறினார்.

தேசிய முன்னணி செய்த தவறுகளை அனுபவமாகவும் படிப்பினையாகவும் எடுத்துக் கொண்டு மக்களுக்கான ஆட்சியை பாக்காத்தான் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

பொதுத் தேர்தலின் வெற்றியை கொண்டாடி மகிழும் இவ்வேளையில் நமக்கு பெரும் கடமையும் பொறுப்பும் இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது.மேலும்,நாட்டை வழிநடத்த அரசாங்கத்திற்கு மக்களும் பக்கபலமாக இருத்தல் வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதேவேளையில்,சுமார் 60 ஆண்டுகள் இந்நாட்டில் மகளிர் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.பாக்காத்தான் ஆட்சியில் பெண்கள் வாழ்வாதாரமும் அவர்களின் வளர்ச்சியும் மேம்பாடும் தனித்துவம் காண வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

நமது பயணம் நீளமானது.இதில் சோர்ந்து விடாமல் சரியான இலக்கில் நாம் பயணிக்க வேண்டும்.மலேசியர்கள் எனும் ஒரே சிந்தனையோடு நாம் புதியதொரு மலேசியாவை நம்பிக்கையாக உருவாக்குவோம் வாரீர் என அவர் மலேசியர்களுக்கு அன்பு வேண்டுக்கோளும் விடுத்தார்.


Pengarang :