கோலாலம்பூர், ஜூன் 17:
போக்குவரத்து துறை நடத்துநர்கள் வருங்காலங்களில் ரொக்கமில்லா கட்டண முறையை அறிமுகப்படுத்த முயற்சிப்பர் என்று போக்குவரத்து அமைச்சு நம்பிக்கை தெரிவித்தது. இந்த நடவடிக்கையானது பொது போக்குவரத்து சேவையின் ஆற்றலை மேம்படுத்துவதோடு பயனீட்டாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியுவ் ஃபூக் கூறினார்.
“கடந்தாண்டு தொடங்கி, ரொக்கமில்லா சமூகத்தை நோக்கி மலேசியா முன்னேற வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறி வருகிறார்” என்றார் அவர்.
“ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் பல்வேறு துறைகளின் ஆற்றலை உயர்த்துவதோடு நாட்டில் ஊழல் நடவடிக்கைகளையும் முறியடிக்க முடியும். ஏனெனில், இதன் பரிவர்த்தனைகள் அனைத்திற்கும் பதிவுகள் இருக்கும்” என்று இஆர்எல் நிறுவனம் ஏற்பாடு செய்த ரொக்கமில்லா பொது போக்குவரத்து சேவை இயக்கத்தை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.