சிபு, ஜூலை 21:
மலைப்பாம்பைப் பிடிக்கச் சென்றபோது மரணமுற்ற தீயணைப்பு வீரர் முகமது சாப்பி ஜூலைஹியின் மூன்று பிள்ளைகளும் இங்குள்ள சமூகநல இல்லத்தில் சேர்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிபு சென்ரல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் நடைபெற்ற சம்பந்தப்பட்ட தீயணைப்பு வீரரின் பிள்ளைகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் சரவா ஆதரவற்றோர் அறவாரியத்தின் அறங்காவலரும் மாநில முதல்வரின் துணைவியாருமான டத்தோ அமார் ஜூமைனி துவாங்கு பூஜாங் இந்த வாய்ப்பை அப்பிள்ளைகளுக்கு வழங்கினார்.
வழங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பு குறித்து தாங்கள் இன்னும் முடிவேதும் செய்யவில்லை என்று இப்பிள்ளைகளின் பாதுகாவலாகராகச் செயல்படும் ரோக்கியா ஜூலைஹி ( வயது 49) தெரிவித்தார்.
“என்னால் உடனடியாக எந்தவொரு முடிவையும் எடுக்க முடியவில்லை. இந்தப் பிள்ளைகளை விட்டுப் பிரிய எனக்கு மனம் வரவில்லை. அதிலும் குறிப்பாக, கடைக்குட்டி என்னுடன் மிகவும் நெருக்கமாக உள்ளதால், சற்றென்று ஒரு முடிவை எடுப்பதற்கு சிரமமாக இருக்கிறது” என்றார் அவர்.