பத்து கேவ்ஸ், அக்.15-
சுவரோட்டி மற்றும் காணொளி போட்டி வழி “ குடிநீர் சேமிப்பு வீரராவேன்” என்ற கருப்பொருளுடன் குடிநீர் சேமிப்பு இயக்கம் ஒன்றை சிலாங்கூர் ஆயர் நிறுவனம் தொடக்கியுள்ளது. இன்று (அக்டோபர் 15) தொடங்கி ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இப்போட்டியில் 2 லட்சம் வெள்ளி மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படவிருப்பதாக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுஹைமி கமருல்ஸமான் கூறினார்.
குடிநீர் விநியோகம் சீராக இருப்பதை உறுதிசெய்யும் அவசியத்தையும் குடிநீர் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் அவசியத்தையும் அனைத்து தரப்பினரும் உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
ஆயர் சிலாங்கூர் நிறுவன பணியாளர்கள் தவிர்த்து அனைவரும் இந்தப் போட்டியில் பங்கெடுக்கலாம்.
பங்கேற்பாளர்கள் தண்ணீரை சேமிப்பது குறித்து கற்பனை திறன்மிக்க காணொளி அல்லது சுவரோட்டியை ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்தாகிராமில் #beawaterconservationwarrior என்ற ஹேஷ் தெக் செய்து பதவேற்றம் செய்ய வேண்டும்.
இப்போட்டியில் சமர்ப்பிக்கப்படும் படைப்பின் கற்பனை திறன், சொல்ல விரும்பு செய்தி மற்றும் மக்கள் மத்தியில் கிடைக்கப்பெற்ற ‘ லைக்ஸ்” அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றார் அவர்.