ஷா ஆலம், டிச.13-
சிலாங்கூர் இந்திய தொழில்முனைவர் மேம்பாட்டு திட்டத்திற்கு (சித்தம்) கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதுவரை மாநில முழுவதிலும் இருந்து மொத்தம் 2,142 இந்திய சமூகத்தினர் வின்னப்பித்துள்ளனர்.
புகைப்படத் துறை, தையல், வெல்டிங் மற்றும் சிகையலங்காரம் ஆகிய தொழில்துறையில் ஈடுபட இந்திய சமூகத்தினர் ஈடுபட விரும்புகின்றனர் என்பது இந்த விண்ணப்பங்கள் மூலம் தெரியவந்ததாக தொழில்முனைவர் மேம்பாடு, புறநகர், கிராம மற்றும் பாரம்பரிய கிராம மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயில் கூறினார்.,
“மேற்கண்ட 4 துறைகள் தொடர்பில் மாநில அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களைக் கொண்டு மொத்தம் 40 பங்கேற்பாளர்களுக்கு மூன்று மாத கால பயிற்சியளிக்கப்பட்டது” என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட பயிற்சிகளில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் அவர்களுக்கு வழிகாட்டும் நிறுவனங்களுடன் தொடர்ந்து பணிபுரிந்து பின்னர் சொந்த தொழிலைத் தொடங்குவர் என்று மாநில அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
“எந்தவொரு வர்த்தகத்திற்கு நமக்கு வழிகாட்டல் தேவை. எனவே இங்கு நாம் பயிற்சி வழங்குவதோடு நின்றுவிடாமல் தேவையான உபகரணங்களையும் வழங்குகிறோம்” என்றார் அவர்.
மாநில அரசு செயலகக் கட்டட முகப்பில் இன்று நடைபெற்ற சித்தம் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ரோட்ஸியா மேற்கண்டவாறு உரை நிகழ்த்தினார்.