பெட்டாலிங் ஜெயா, டிச.13-
தத்தம் பகுதியில் நீடித்த மேம்பாட்டு திட்டத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக 17 ‘வெற்றியாளர்’ சமூகங்களுக்காக பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (எம்பிபிஜே) 170,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதே சமயம், மேலும் 15 சமூகங்களுக்கு எம்பிபிஜே ஆறுதல் பரிசாக 45,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அறிவித்தது போல வளமும் சுபிட்சமுமிக்க ஒரு பகுதியாக எம்பிபிஜேவைத் திகழச் செய்வதற்கு இந்த ஒதுக்கீடு அவசியம் என்று பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமது சயூத்தி பாக்கார் தெரிவித்தார்.
டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெற்ற பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தில் நடைபெற்ற நீடித்த சமூக மேம்பாட்டு திட்ட விருதளிப்பு நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.
“தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகங்கள் தனியார் துறையினர், தொழில் கழகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து தத்தம் பகுதியில் மேம்பாட்டு திட்டங்களை விரிவான முறையில் மேற்கொள்வதற்கு நாங்கள் உதவுவோம்” என்று அவர் மேலும் கூறினார்.