ஷா ஆலம், ஜன.17-
கொண்டாட்டக் காலங்களில் தூய்மைக்கேடு ஏற்படுவதைத் தவிர்க்க ஆற்று பகுதிகளை 24 மணி நேரம் கண்காணிக்க சிலாங்கூர் ‘ஓப்ஸ் சும்பர் ஆயர்’ அமலாக்க நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது என்று ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லொய் சியான் தெரிவித்தார்.
தண்ணீர் சுத்திகரிப்பு நடவடிக்கையும் நீர் விநியோகமும் தடைபடுவதைத் தவிர்க்க இந்த அமலாக்க நடவடிக்கை ஜனவரி 17ஆம் தேதி தொடங்கி ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என்றார் அவர்.
சிலாங்கூரின் 90 விழுக்காடு நீர் வளம் அமைந்திருக்கும் சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை லங்காட் அணைக்கட்டுகளில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஹீ தெரிவித்தார்.
“சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியத்தின் தலைமையில் நடைபெறும் இந்த அமலாக்க நடவடிக்கையில் பத்து அமைப்புகளைச் சேர்ந்த 200 பணியாளர்கள் ஈடுபடுவர்” என்று அவர் சொன்னார். இதனிடையே, இவ்விரு அணைக்கட்டு பகுதிகளில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது பெரிய அளவிலான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும்படி இண்டா வாட்டர் கொன்சோர்ட்டியம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.