கோலாலம்பூர், ஏப்.29-
மலேசியா தற்போது நான்காவது கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) அமலாக்கத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. நாடு தற்போது கோவிட் -19 தொற்று பரவலில் இருந்து சீரடைந்து வருவதைக் காண முடிகிறது. இந்நோயைக் கட்டுப்படுத்துவதில் கண்ட வெற்றி, கோவிட் -19 நோயில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மூன்று நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்க நடவடிக்கைகள் யாவும் இந்நோய் பரவலைத் தடுப்பதில் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் நல்ல பலனை அளித்திருப்பதைக் காட்டுகின்றன.
இது தவிர்த்து, கடந்த மார்ச் 18 ஆம் தேதி பிகேபி அமல்படுத்தப்பட்டது முதல் நேற்று முன் தினம் நண்பகல் 12 வரை 31 சம்பவங்கள் என மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கோவிட் -19 நோயாளிகள் பதிவை நாடு கொண்டிருந்ததாக சுகாதார அமைச்சு (கேகேஎம்) அறிவித்தது. நாடு தற்போது கோவிட் -19 தொற்றில் இருந்து சீரடைந்து வருவதால் பொருளாதார துறைகள் மீண்டும் செயல்பட ஊக்குவிக்கப்படுகின்றன. எனினும், இவை சுகாதார அமைச்சின் தர நிர்ணய நடவடிக்கை விதிமுறைக்குக் (எஸ்ஓபி) கட்டுப்பட வேண்டும் என்று சுகாதார துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.