ஷா ஆலம், ஏப்ரல் 30:
அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு (மிட்தி) அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்கள் தங்களது வணிகத்தை செயல்படுத்த சிலாங்கூர் ஊராட்சி மன்றங்கள் தடை செய்யாது என்று சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் கூறினார் தெரிவித்தார். இருந்தாலும், ஊராட்சி மன்றங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை கண்காணித்து வரும் என்றும் மாநில அரசாங்கம் நிர்ணயித்த நடமாடும் கட்டுப்பாடு ஆணையின் (பிகேபி) வழிமுறைகளை கடை பிடித்து வர வேண்டும் என்று அவர் நினைவுபடுத்தினார்.
” மிட்தி அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களை ஊராட்சி மன்றங்கள் ஒருபோதும் தடை செய்யாது. ஆனாலும், மேற்கண்ட நிறுவனங்கள் பிகேபி காலகட்டத்தில் அரசாங்கம் நிர்ணயித்த வழிமுறைகளை கடை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதை உணர வேண்டும். ஊராட்சி மன்றங்களின் அமலாக்க அதிகாரிகள் தினந்தோறும் நள்ளிரவு வரை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.
இதற்கு முன், பெரித்தா ஹாரியான் தகவலின்படி, மலேசிய தேசிய முதலாளிகள் சங்கத்தின் தலைமை இயக்குநர் டத்தோ சம்சுதீன் பார்டான் தமது தரப்பினருக்கு 10 மின்னியல் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு சிலாங்கூர் ஊராட்சி மன்றங்கள் தடை விதிப்பதாக புகார் அளித்தது தொடர்பாக எங் ஸீ ஹான் இவ்வாறு விளக்கினார்.