ஷா ஆலம், ஜூலை 28:
துரோகிகள் இல்லாமல் கோம்பாக் தொகுதி மக்கள் நீதிக் கட்சி (பிகேஆர்) ஜனநாயக வழியில் வலுவாக இருக்கிறது என்றும் நிர்வாக ரீதியில் சிறப்பாக செயல் படுகிறது என கோம்பாக் தொகுதி பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் சைட் அலி தெரிவித்தார். டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் தலைமையில் கோம்பாக் பிகேஆர் தொகுதி திறம்பட செயல்பட்டு வருகிறது என்றார் அவர். அமிருடின் ஷாரி சிலாங்கூர் மாநில பிகேஆர் கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
” அரசியல் தலைவர்களை புகழ் மாலை சூடுவது மற்றும் ஜால்ரா அடிக்கும் கலாச்சாரம் துரோகிகள் கட்சியை விட்டு விலகியதால், தொகுதி சிறப்பாக செயல்பட முடிகிறது. ஒரு தனிப்பட்ட நபரின் கைப்பாவையாக செயல்பட்ட தொகுதி, தற்போது சுதந்திரமாக இயங்க முடிகிறது. கோம்பாக் பிகேஆர் இனி சுதந்திரம் அடைந்த தொகுதியாக மக்களுக்கும் மற்றும் நாட்டிற்கும் சேவை ஆற்றும்,” என்று சைட் அலி தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல், கோம்பாக் பிகேஆர் தொகுதி தொடர்ந்து பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்தார். எதிர் வரும் 15-வது பொதுத் தேர்தலில் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியை பிகேஆர் துரோகிகளிடம் இருந்து கைப்பற்றுவோம் என்று சைட் அலி சூளுரைத்தார்.