SELANGOR

ஸ்ரீ பெரேம்பாங் அடுக்குமாடி குடியிருப்பு பிரச்னைக்கு தீர்வு காணப்படும் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் உறுதி

கோலக் கிள்ளான், செப் 30- ஸ்ரீ பெரேம்பாங் அடுக்குமாடி குடியிருப்பின்
கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று
கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி கூறினார்.

அந்த மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்டுள்ள மோசமான
பாதிப்புகளை சரி செய்வது தொடர்பில் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை
அமைச்சுடன் பேச்சு நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாக அவர் சொன்னார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பு வசிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல என்று
பொதுப்பணித்துறை கூறியுள்ளதால் அக்கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி
செய்வது உசிதமான செயலாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த குடியிருப்புக் கட்டிடங்கள் மிகவும் நெருக்கமாக உள்ளதோடு அருகில் பல
தொழில்துறையின் டாங்கிகளும் உள்ளன என்றார் அவர்.
கடந்தாண்டு முதல் தாம் பல முறை அப்பகுதிக்கு வருகை புரிந்துள்ளதாகவும்
அக்கட்டிடம் ஒரு பக்கமாக சாய்ந்து வருவதால் பொதுமக்கள் அங்கு வசிப்பது
பாதுகாப்பானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ள கட்டிடங்களில் குடியிருப்போர் குறித்த
கணக்கெடுப்பை கிள்ளான் நகராண்மை கழகமும் தேசிய வீட்டுமை இலாகாவும்
மேற்கொண்டு வருகின்றன.

நேற்று அப்பகுதிக்கு வருகை புரிந்த வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை
அமைச்சர் ஜூரைடா கமாருடின், அங்குள்ள ஐந்து மலிவு விலை குடியிருப்புகள் 22
ஆண்டு பழைமை வாய்ந்தவை என்றும் அவற்றில் ஒன்று மக்கள் குடியிருப்பதற்கு
பாதுகாப்பானது அல்ல என்றும் கூறியிருந்தார்.

அங்குள்ள மூவாயிரம் பேரை மறு குடியேற்றம் செய்வதற்கு ஏதுவாக மாநில
அரசு நிலத்தை வழங்கி உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :