கிள்ளான் டிச 7;- கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் கோத்தா ராஜா தொகுதி தலைவருமான மாண்புமிகு குணராஜ் அவர்களின் உதவியுடன் சுமார் 15 தாமான் செந்தோசா வாழும் இந்தியக் குடும்பங்கள் விவசாயத்திற்கான நிலத்தைப் பெற்றுள்ளனர்.
ஜாலான் கூன் ஜாலான் நன்னாஸ் அரசாங்கப் புறம்போக்கு நிலத்தைச் சிலர் சட்ட விரோத நடவடிக்கைகளுக்குக் குறிப்பாகக் குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றி வந்த செயலைத் தடுக்கும் வண்ணமாகக் கடந்த வாரம் பெரிய அளவில் அங்குள்ள குப்பைகள் அப்புறப் படுத்தப்பட்டது, இருப்பினும் அத்துமீறிச் சிலர் நடக்கத்தான் செய்வார்கள்.
அதனால், அந்தத் தரிசு நிலங்களை மக்களுக்குப் பயனுள்ள வழிகளில், குறிப்பாக விவசாயத்திற்குப் பயன் படுத்தினால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்.. தற்போது சிலாங்கூர் மாநில அரசாங்கம் தரிசு நிலங்களை விவசாய நிலமாக மாற்றக் கொள்கை கொண்டுள்ளது.
அதனை நினைவாக்கும் வண்ணம் செந்தோசா வாழும் குடியிருப்பாளர்கள் சிலர் இந்தத் தரிசு நிலங்களை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் வண்ணம் ஏற்பாடுகளைச் செய்து தந்த அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரை வெகுவாகப் பாராட்டினர்,
அது குறித்து அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான குணராஜ் அவர்கள் கூறும் பொழுது, தரிசு நிலங்களை வழிப்போக்கர்கள் தங்கள் விருப்பத்திற்குத் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்க அரசாங்கம் என்றும் காவல் காத்துக் கொண்டிருக்க முடியாது.
அதனால் பயன்பாட்டில் இல்லாத நிலங்களை இப்படி விவசாயங்களுக்கு ஒதுக்கித்தரும் பொழுது அதில் பல ஏழைக் குடும்பங்கள் பயனடையும், குறிப்பாக இந்த நோய் தடுப்பு கட்டுப்பாடு காலத்தில் பல குடும்பங்கள் வருமானம் இன்றி சிரமப் படுகிறது.
இவ் வேளையில், அவர்களின் தினசரி மரக்கறி தேவைகளை பூர்த்தி செய்வதாக இந்த நிலங்கள் பயன் பட்டாலே அது பெரிய உதவியாக இருக்கும் என்றார் கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் கோத்தா ராஜா தொகுதி தலைவருமான குணராஜ்.