கிள்ளான், டிச 23: கிள்ளானைச் சுற்றியுள்ள சுமார் 2,000 குடியிருப்பாளர்கள் இன்று மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த செல்கேர் கிளினிக் இலவசக் கோவிட் -19 மருத்துவச் சோதனையில் பங்குபெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தாமான் பாயூ பெர்டானா, ப்ரிமா பாயூ அபார்ட்மென்ட், பாயூ வில்லா அபார்ட்மென்ட், பண்டார் புக்கிட் டிங்கி மற்றும் தாமான் ஸ்ரீ அண்டாலாஸ் ஆகிய வீடமைப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றதாகப் பண்டமாரான் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் டக் சீ தெரிவித்தார்.
அருகிலுள்ள மற்ற வீடமைப்பு பகுதிகளிலிருந்தும் குடியிருப்பாளர்கள் இன்றைப் பரிசோதனையில் பங்கு எடுத்துக்கொண்டார்கள் , ஆனால் அவர்கள் ( SELangkah) செயலி மூலம் தங்களை முன்கூட்டியே பதிந்து கொண்டவர்களாகும்.
அவ்வாறு செய்ய விரும்புவோர் , முதலில் (SELangkah) என்னும் தொலைபேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்பது அதன் விதிமுறையாகும் .
“இங்குப் பயன்படுத்தப்படும் சோதனை கருவி ஆன்டிஜென் (ஆர்.டி.கே-ஏஜி) என்பது விரைவான சோதனை கருவியாகும். இதன் சோதனை முடிவுகள் சுகாதாரப் பணியாளர்களால் விரைவாக அறியப்படுகின்றன, என்று அவர் இன்று இங்குள்ள தாமான் பாயூ பெர்டானவின் ஜாலான் பத்து உஞ்சோர் 3ஏ வில் உள்ள ஆய்வு கூடத்திற்குக் கூடத்திற்கு வருகைபுரிந்த பின்னர்க் கூறினார்.
இதற்கிடையில், இதுபோன்ற சோதனைகளை மேற்கொள்ளும் தனியார் கிளினிக்கள் வாடிக்கையாளர் சோதனை மாதிரிகளின் முடிவுகளைப் பொதுச் சுகாதார ஆய்வகத் தகவல் அமைப்பில் (சிம்கா) சேமிக்கும் சேவையை வழங்க வேண்டிக் கேட்டுக் கொண்டார்.
இதனால், மலேசியா சுகாதார இலாக்கா (எம்ஓஎச்) கோவிட் 19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டறிவதை எளிதாக்கும் என்றார் பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங்
சிம்காவில் சோதனை முடிவுகளை உள்ளிடுவதன் மூலம், ஒருவரை மருத்துவச் சிகிச்சைக்கு உடனே அனுமதிப்பதா இல்லையா என்பதை மலேசியச் சுகாதாரத் துறை தீர்மானிக்கவும், மேல் நடவடிக்கை எடுக்கவும் அது துணையாக இருக்கும் என்றார் அவர்.