ஷா ஆலம், ஜன 29– கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சுகாதார மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் பேச்சு நடத்தும்படி அரசாங்கத்தை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறியும் விவகாரத்தில் மக்களின் நலன் கருதி அரசாங்கம் வெளிப்படையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மக்கள் பட்டினியால் வாடக்கூடாது என நாம் விரும்கிறோம். ஆகவே, சுகாதாரத்தையும் பொருளாதாரத்தையும் சமநிலைப்படுத்துவதற்கு ஏதுவாக சுகாதார மற்றும் பொருளாதார நிபுணர்கள், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினருடன் அரசாங்கம் பேச்சு நடத்தும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
இவ்விவகாரத்தை நான் பல முறை நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளேன். மற்றத் தரப்பினரின் கருத்துகளை கேட்பதில் என்ன தவறு உள்ளது? அந்த கருத்துக்களை ஏற்பதா? இல்லையா? என முடிவெடுப்பது அரசின் கையில்தானே உள்ளது என்று அவர் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவும் குழப்ப நிலையிலும் தெளிவற்றதாகவும் உள்ளது என்றும் அவர் சொன்னார்.
அரசாங்கத்தின் எந்த நடவடிக்கையும் சீராக இல்லை. சிறிது நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையும் சிறிது நாட்களுக்கு நிபந்தனையுடன் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையும் அறிவிக்கப்படுகிறது. வேலையிடங்களிலும் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளிலும் நோய்ப் பரவலைத் தடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டு விட்டது என்றார் அவர்.