ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வர்த்தக ரீதியாகவும் செயல்படும் வகையில் செலங்கா செயலி தரம் உயர்த்தப்படும்

ஷா ஆலம், பிப் 10– வர்த்தக ரீதியாகவும் செயல்படுவதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநில அரசின் செலங்கா செயலியின் தரம் உயர்த்தப்படவுள்ளது. பயனீட்டாளர்கள் தங்களை இலக்கவியல் துறைக்கு தயார் படுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பினை பெறுவதற்கு இந்நடவடிக்கை துணை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூர் மாநில அரசின் பல்வேறு சேவைகளும் திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த செலங்கா செயலி வாயிலாக பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று அந்த செயலியின் விளம்பரத் தூதர் அடிபா நோர் கூறினார்.

இந்த இலக்கவியல் திட்டத்தின் வாயிலாக வாடிக்கையாளர்கள் தங்கள் பில்களையும் அபராதத் தொகையையும் எளிதாக செலுத்த முடியும். இது தவிர, மாநில அரசின் சமூக நலத் திட்டங்கள் வாயிலாக உதவிகளையும் பெற இயலும் என்றார் அவர்.

இந்த செலங்கா செயலியின் பயன்கள் குறித்து இயங்கலை வாயிலாக பொதுமக்களுக்கு விளக்கிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை சீராக மேற்கொள்வதற்கு ஏதுவாக அந்த தடுப்பூசியின் முன் பதிவுக்கான ஒருங்கிணைந்த முறையும் அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதுமட்டுமின்றி, இந்த செயலி செலங்கா பிஸ் எனப்படும் வர்த்தக வசதியையும் விரைவில் கொண்டிருக்கும்.. இதன் மூலம் வணிகர்கள் எந்த இ-டொம்பேட் தளத்திலிருந்து பணத்தை பட்டுவாடா செய்ய இயலும் என்றார் அவர்.

அதோடு மட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் ரொக்கமின்றி பணப் பட்டுவாடா நடபடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதி செய்யும் வசதிகளும் இந்த செயலியில் ஏற்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 


Pengarang :