ஷா ஆலம், பிப் 25- தொகுதி மக்களுடன் அணுக்கமான உறவு பாலத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் பத்து தீகா சட்டமன்ற தொகுதி சேவை மையம் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கக்பட்ட என்41 என்ற அந்த செயலியின் வாயிலாக தொகுதி மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கவும் உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் முடியும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார். பயனீட்டாளர்கள் இந்த செயலியை தங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து தங்களைப் பற்றிய விபரங்களை பதிவு செய்தால் போதுமானது. அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம் என்று மாநில அரசின் ஆட்சிக் குழு உறுப்பினருமான அவர் சொன்னார். பத்து தீகா தொகுதியில் மீண்டும் பள்ளிக்கு போகலாம் இயக்கத்தை தொடங்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார். தொகுதியின் நிலவரங்களை கண்காணிப்பதற்கும் பிரச்சினையை எதிர்நோக்குவோருக்கு உதவிகள் புரிவதற்கும் இந்த செயலி பெரிதும் துணை புரியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.