ஷா ஆலம், மார்ச் 26– மத்திய அரசு கொள்முதல் செய்வதற்காக அளிப்பாணை கொடுத்துள்ள ஐந்து கோவிட்-19 தடுப்பூசிகள் மீது சிலாங்கூர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
மாநில மக்களின் தேவைக்காக சொந்தமாக தடுப்பூசியை வாங்குவதற்கு தொடர்பில் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் எத்தகைய தடுப்பூசி பொருத்தமானது என்பதை தீர்மானிப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தடுப்பூசியை கொள்முதல் செய்வது மற்றும் பொதுமக்களுக்கு செலுத்துவது ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கு முன்னர் அந்த தடுப்பூசியின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.
பொருத்தமான நேரத்தில் அந்த தடுப்பூசியை நாம் பெறுவோம். இவ்விவகாரத்தில் அவசர கதியில் செயல்படவோ முறையான வழி முறைகளைப் பின்பற்றாமல் செயல்படவோ நாம் விரும்பவில்லை. இத்தகைய செயல்கள் நோய்த் தொற்றிலிருந்து விடுபடுவதற்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகளை பாதித்து விடும் என்றார் அவர்.
தடுப்பூசியை கொள்முதல் செய்யும் பணியில் தற்போது நாம் எந்த பிரச்னையையும் எதிர்நோக்கவில்லை. இவ்விவகாரத்தில் அனைத்துத் தரப்பினருடனான ஒத்துழைப்பு சுமூகமாக உள்ளது. நோய்த் தொற்றை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஏதுவாக தடுப்பூசியை விரைந்து கொள்முதல் செய்ய முடியும் என நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடினுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
சிலாங்கூர் அதிக தொழிலாளர்களையும் தொழில்துறைகளையும் கொண்ட மாநிலமாக விளங்குவதால் கோவிட்-19 தடுப்பூசிகளை சொந்தமாக வாங்க முடிவெடுக்கப் பட்டதாகவும் அவர் விளக்கினார்.
இம்மாநிலத்தில் 120 தொழிற்சாலைகளும் 30 லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பு உண்டாகும் என்று மேலும் குறிப்பிட்டார்.