கோலாலம்பூர், மார்ச் 28– பதினெட்டு வயதினருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இயக்கவாதிகளும் மக்கள் பிரிநிதிகள் சிலரும் நாடாளுமன்றக் கட்டிடம் முன் நேற்று அமைதி மறியலில் ஈடுபட்டனர்.
இந்த அமைதி மறியலில் கலந்து கொண்டவர்களில் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷியாகாரன் மற்றும் கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய் ஆகியோரும் அடங்குவர்.
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரிய சின் அப்துல்லா, கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா உள்பட கெஅடிலான் கட்சியின் தலைவர்கள் பலரும் இந்த பேரணியில் கலந்து கொண்டதாக மலேசியா கினி இணைய ஊடகம் கூறியது.
வாக்களிப்பதற்கான வயது வரம்பை குறைக்கும் அதேவேளையில் 18 வயது நிரம்பியவர்கள் இயல்பாகவே வாக்காளர்களாக பதிவு செய்யப்படும் நடைமுறையும் அமல் செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
18 வயது நிரம்பியவர்கள் வாக்களிப்பதற்கான அனுமதி மற்றும் இயல்பாக வாக்காளராக நடைமுறை ஆகியவை இவ்வாண்டு ஜூலை மாதத்திற்குள் அமலுக்கு வரும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ தக்கியுடன் ஹசான் முன்பு கூறியிருந்தார்.
எனினும், அவ்விரு நடைமுறைகளையும் அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்தில்தான் அமல்படுத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினர் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.