ஷா ஆலம், மே 16– கட்டொழுங்கும் உயர்நெறியும் தொலைநோக்கு சிந்தனையும் கொண்ட இளைய சமுதாயத்தை உருவாக்குவதில் உறுதிபூண்ட ஆசிரியர்கள் அனைவரும் விலை மதிப்புமிக்க சொத்துக்களாக கருதப்படுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நாட்டின் சொத்துக்களாக எதிர்காலத்தில் வரக்கூடிய இளைய தலைமுறையினரை உருவாக்கும் பொறுப்பையும் ஆசிரியர்கள் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
முழு கடப்பாட்டுடனும் தங்கள் நலனை பின்தள்ளியும் சேவையாற்றி வரும் ஆசிரியர்கள் இருந்தாலன்றி கல்வித் திறனும் உயர் நெறியும் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இங்கு இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பில் அமல்படுத்தப்படும் நிச்சயமற்ற விதிமுறைகளும் அதன் விளைவாக இலக்கு தெரியாமல் இருக்கும் நாட்டின் கல்வி கொள்கை மீதும் நாம் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் சொன்னார்.
சமுதாயத்தின் இதர தரப்பினரை போலவே ஆசிரியர்களும் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இதனை நாம் அலட்சியம் செய்து விட முடியாது என்பதோடு நாட்டின் கல்விக் கொள்கை மற்றும் இலக்கை அரசியலாக்காமல் அதனை சீர் செய்ய வேண்டியுள்ளது என்றார் அவர்.