MEDIA STATEMENTPENDIDIKAN

இலவச வகுப்புகள் இயங்கலை வாயிலாக நடத்தப்படும்- சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் தகவல்

கிள்ளான், ஜூன் 4- செந்தோசா தொகுதியில் உள்ள கல்வியில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கான இலவச கல்வித் திட்டம் இயங்கலை வாயிலாக தொடரப்படும்.

நாடு முழுவதும் அமல் செய்யப்பட்ட முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக இந்த வகுப்புகள் இயங்கலை வாயிலாக நடத்தப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

நோன்பு பெருநாளுக்குப் பின்னர் இந்த வகுப்புகளை நேரடியாக நடத்தும் திட்டத்தை தாங்கள் தற்போது மாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கோப்புகள், புத்தகங்கள் மற்றும் கல்விக்கான உபகரணங்களை வழங்கியிருந்தோம். அதனைத் தொடர்ந்து ஐந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் கூகுள் மீட் வழிமுறையைப் பயன்படுத்தி அவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்றார் அவர்.

இந்த வகுப்புகள் வாரந்தோறும் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இரவு 8.30 மணி முதல் 9.00 மணி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வகுப்புகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப 25 பெற்றோர்கள் முன்வந்துள்ளனர். வகுப்புகள் நடைபெறும் போது தங்கள் பிள்ளைகளுடன் உடனிருக்கவும் அவர்கள் சம்மதித்துள்ளனர் என்றார் அவர்.

கல்வியில் மிகவும் மந்தமாக உள்ள மாணவர்கள் குறைந்த பட்சம் வாசிப்பு, எழுத்து மற்றும் கணக்கு ஆகியவற்றில் ஓரளவு தேர்ச்சி பெறுவதை உறுதி செய்யும் நோக்கில்  மூன்று மாத கால பயிற்சித் திட்டத்தை செந்தோசா தொகுதி கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி தொடக்கியது.


Pengarang :