ஷா ஆலம், ஜூன் 3– ஆங்கில வகுப்பில் இலவசமாக பங்கேற்கும் வாய்ப்பு மாநிலத்திலுள்ள 250 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. எசிஸ்ட் எனப்படும் கூடுதல் கல்வித் திட்டத்தின் கீழ் வரும் சனிக்கிழமையன்று இந்த வகுப்பு நடைபெறும்.
டீம் சிலாங்கூர் எனப்படும் தன்னார்வலர் அமைப்பின் ஏற்பாட்டிலான இந்த கல்வித் திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் பி40 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் பொருட்டு கடந்தாண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட ஸ்கோர்லாக எஸ்.பி.எம். எனும் திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆங்கில வகுப்பு நடத்தப்படுவதாக அந்த தொண்டூழிய அமைப்பின் பள்ளிகள் பிரிவுத் தலைவர் முகமது ஹபாஷ் பிக்ரி ஜஸ்னி கூறினார்.
தேர்வுத் தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த மற்றும் கல்வித் துறையில் பழுத்த அனுபவம் கொண்ட ஆசிரியர்களைக் கொண்டு இந்த வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் அவர் சொன்னார்.
கல்வியில் சிறந்த அடைவு நிலையைப் பெறுவதற்கு உதவி தேவைப்படும் பி40 பிரிவினரின் பிள்ளைகளை மையமாக கொண்ட இந்த வகுப்புகளை திறன்மிக்க ஆசிரியர்கள் வழிநடத்துவர் என்றார் அவர்.
இந்த வகுப்புகளில் பங்கேற்பதற்கு குறிப்பிட்ட இடங்களே உள்ளதாக கூறிய அவர், ஆர்வமுள்ள மாணவர்கள் http://bit.ly/assistBI எனும் அகப்பக்கம் வாயிலாக அல்லது 017-6127269 என்ற தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிட்டார்.