HEALTHMEDIA STATEMENTNATIONAL

ஆகஸ்டு மாதம் முதல் தினசரி 300,000 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படும்

இஸ்கந்தார் புத்ரி, ஜூன் 9- வரும் ஜூலை மாதம் தொடங்கி  நாளொன்றுக்கு 200,000 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தவும் வரும் ஆகஸ்டு மாதத்தில் அந்த எண்ணிக்கையை 300,000 ஆக உயர்த்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கு நாடு முழுவதும் அதிகமான தடுப்பூசி செலுத்தும் மையங்களை திறப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக அதிகமான மற்றும் பெரிய அளவிலான தடுப்பூசி மையங்கள் நாடு முழுவதும் திறக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் தாம் ஜோகூர் உள்பட பல மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

நமது திட்டம் முறையாக நிறைவேறினால் வரும் அக்டோபர் மாதத்திற்குள் நாட்டு மக்களில் 80 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் பெற்றிருப்பர் என்றார் அவர்.

ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஹஸ்னி முகமதுவுடன் இணைந்து கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை மன்ற கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பெரிய அளவில் தடுப்பூசி மையங்களை அமைக்கும் அதே வேளையில் அதனை செயல்படுத்துவதற்கு போதுமான மனித ஆற்றல் இருப்பதையும் அரசாங்கம் உறுதி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நோக்கத்திற்காக தாங்கள் தனியார் துறையின் ஒத்துழைப்பை நாடியுள்ளதோடு பயிற்சி மருத்துவர்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்கள், தாதியர், மருத்துவ மாணவர்களின் உதவியையும் பெறவுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :