ஷா ஆலம், ஜூன் 9- நோய்த் எதிர்ப்பு சக்தி கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் இலக்கை அடைய குறைந்தது 40 லட்சம் சிலாங்கூர்வாசிகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படுவது அவசியமாகும் என்று சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
நாற்பது லட்சம் பேர் என்பது மாநிலத்திலுள்ள 65 லட்சம் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டை பிரதிநிதிக்கிறது என்று அவர் சொன்னார்.
பதினெட்டு வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள் இந்த தடுப்பூசி இயக்கத்தில் சேர்க்கப்படவில்லை. இத்தரப்பினருக்கு தடுப்பூசி செலுத்துவது உசிதமானதா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
எண்பது விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் பட்சத்தில் எஞ்சியுள்ள இருபது விழுக்காட்டிரையும் நாம் காப்பாற்ற முடியும். இதன் மூலம் கோவிட்-19 நோய்ப் பரவல் சங்கிலித் தொடர்பை முழுமையாக துண்டிக்க முடியும் என்றார் அவர்.
“கோவிட்-19: எந்த தடுப்பூசி சிறந்தது?” எனும் தலைப்பில் முகநூல் வாயிலாக நடைபெற்ற ஆய்வரங்கில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசு சொந்தமாக தடுப்பூசியை வாங்குவது மத்திய அரசு அமல்படுத்தியுள்ள தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை புறந்தள்ளும் நோக்கிலானது அல்ல என்றும் சித்தி மரியா தெளிவுபடுத்தினார்.
மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை விரைவுபடுத்துவது மற்றும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் விரைவில் முழுமை பெறுவதை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் சிலாங்கூர் மாநில அரசின் இந்நடவடிக்கை அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.