ஷா ஆலம், ஜூன் 11- கோவிட்-19 நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு உதவும் பொருட்டு சிலாங்கூர் தொழில் முனைவோர் கிளினிக் கூடுதல் அம்சங்களுடன் தரம் உயர்த்தப்படும்.
வர்த்தகர்கள் தங்கள் வியாபாரத்தை மேம்படுத்துவதில் உதவ பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற 100 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
இயங்கலை வாயிலாக இலவச கருத்தரங்குகள் நடத்தப்படும். இதில் சம்பந்தப்பட்ட ஆலோசக நிபுணர்கள் வர்த்தகர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவர் என்றார் அவர்.
உதாரணத்திற்கு விற்பனை பொருள்களை எவ்வாறு பிரபலப்படுத்துவது, பொட்டலமிடுவது மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருமானத்தை பெருக்குவது போன்ற விஷயங்களை அந்த நிபுணர்கள் பகிர்ந்து கொள்வர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
துனாஸ் நியாகா திட்ட பங்கேற்பாளர்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு ஏற்பாட்டில் கடந்தாண்டு ஜூலை மாதம் தொழில் முனைவோர் கிளினிக் தொடக்கப்பட்டது.