ஷா ஆலம், ஜூன் 12– சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் வாயிலாக மாநில மக்களுக்கு ஐந்து லட்சம் தடுப்பூசிகளை வாங்க சிலாங்கூர் அரசு மேற்கொண்டு வரும் முயற்சியை மலேசிய மருத்துவ சங்கம் வரவேற்றுள்ளது.
தடுப்பூசியை சொந்தமாக வாங்கும் மாநில அரசின் திட்டம் மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை விரைவுபடுத்த பெரிதும் துணை புரியும் என்று அச்சங்கத்தின் தலைவர் பேராசிரியர் டத்தோ எம்.சுப்பிரமணியம் கூறினார்.
குறிப்பாக, மூத்த குடிமக்கள், தொழில்துறை, உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள், இளைஞர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவர் என அவர் சொன்னார்.
இத்திட்டத்தின் வெற்றியைக் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மருத்துவர்களை இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் இணைத்த து மக்கள் தடுப்பூசியை விரைந்து பெறுவதை உறுதி செய்வதற்கான சரியான முடிவாகும் என்றார் அவர்.
இத்திட்டத்தில் மேலும் அதிகமான தனியார் மருத்துவர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம். சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் எல்லைப் பகுதிகளில் சுமார் இரண்டாயிரம் மருத்துவர்கள் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என கருகிறோம் என அவர் மேலும் சொன்னார்.
அறிகுறி ஏதுமின்றி மக்கள் மத்தியில் பரவும் நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை தொடர மாநில அரசு எடுத்துள்ள முடிவை தாங்கள் பெரிதும் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.