ஷா ஆலம், ஜூன் 12– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட துறைகள் எதிர்நோக்கும் இன்னல்களை களைவதில் சிலாங்கூர் அரசு தீவிரம் காட்டுவதை அதன் உதவித் திட்டங்கள் புலப்படுத்துவதாக சுற்றுலா துறை சார்ந்த சங்கங்கள் கூறின.
சுற்றுலா துறையின் மீட்சிக்கு மாநில அரசு அறிவித்துள்ள 25.5 லட்சம் வெள்ளி உதவித் திட்டம் அத்துறைக்கு புத்துயிரூட்டப்படுவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளதாக மலேசிய ஹோட்டல் நடத்துநர் சங்கத்தின் சிலாங்கூர் மாநில உதவித் தலைவர் முகமது நஸ்ரி அகமது கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் காரணமாக ஹோட்டல் துறைகள் சுமார் 60 விழுக்காட்டு இழப்பை எதிர்நோக்கும் அளவுக்கு கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. நாங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த இத்தகைய உதவிகள் கிடைக்கப்பெறுவதன் வழி எங்களின் சுமை ஓரளவு குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
இதனிடையே, மாநில அரசின் இந்த உதவித் திட்டம் குறித்து கருத்துரைத்த மலேசிய சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் கோபாலன் மாரியப்பன், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக கடும் பாதிப்பை எதிர் நோக்கியுள்ள சுற்றுலாத் துறைக்கு உதவுவதில் மாநில அரசு கொண்டுள்ள கடப்பாட்டை தாங்கள் பெரிதும் வரவேற்பதாக கூறினார்.
காப்பாற்ற யாருமின்றி நீரில் தத்தளிப்பதை போல் எங்களின் தற்போதைய நிலை உள்ளது. வியாபாரத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு வருமானமின்மை காரணமாக பணியாளர்களை தொடர்ந்து வைத்திருக்க முடியாத நிலை சூழலும் ஏற்பட்டுள்ளது என அவர் சொன்னார்.
பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு சுமார் 55.1 கோடி வெள்ளி மதிப்பிலான கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் அறிவித்தார். இதில் சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்டும் திட்டங்களை அமல் செய்ய 25 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.