புத்ரா ஜெயா, ஜூலை 14- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று அதிவேகத்தில் பரவுவதற்கு ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் ஊடுவியுள்ள டெல்டா வகை நோய்த் தொற்றும் காரணம் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
டெல்டா வகை நோய்த் தொற்று மின்னல் வேகத்தில் பரவக்கூடியது என்பதோடு காற்றின் மூலமாகவும் பிறருக்கு தொற்றும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.
டெல்டா தொற்றின் பரவல் வேகம் மிகவும் அதீதமானது. ஒருவருக்கு அந்நோய் பீடித்தால் மிகவும் குறுகிய நேரத்தில் 800 பேருக்கு அது பரவி விடும் என்று நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் டெல்டா வகை நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஆக்ககரமான பலனைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி பெற்ற சுகாதாரப் பணியாளர்களில் 2,779 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்காகினர். அவர்களில் சிலர் டெல்டா மற்றும் பேட்டா வகை நோய்த் தொற்றுகளாலும் பாதிக்கப்பட்டனர். எனினும், பாதிப்பின் அளவு 1 மற்றும் 2 வது நிலையில்தான் இருந்தது என்றார் அவர்.
நாட்டில் பயன்படுத்தப்டும் தடுப்பூசிகள் டெல்டா உள்பட அனைத்து வகை நோய்த் தொற்றுகளையும் தடுப்பதில் நல்ல பலனைத் தருகிறது. டெல்டா வகை நோய்த் தொற்று விரைவாக பரவுவது மட்டுமே தற்போதைய பிரச்னையாக உள்ளது என அவர் மேலும் கூறினார்.