ஷா ஆலம், ஜூலை 18- சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று வரை 90 விழுக்காட்டு மூத்த குடிமக்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்தியன் வழி நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் முதியோர்களின் எண்ணிக்கை முன்பை விட 40 விழுக்காடு குறைந்துள்ளதாக அவர் சொன்னார்.
ஒரு சிலருக்கு நோய்த் தொற்று கண்டாலும் தடுப்பூசி வழங்கும் பாதுகாப்பு காரணமாக நோய்த் தாக்கம் குறைந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை என்றார் அவர்.
முன்பு சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட அதிகமான மரணச் சம்பவங்கள் தடுப்பூசி பெறாத முதியோரையும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்களையும் உள்ளடக்கியிருந்தது. இதன் அடிப்படையில் பொதுமக்களின் உயிரைக் காப்பதற்கு அதிக அளவில் தடுப்புசி இயக்கங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கிளாங் ஜெயா, தாமான் டேசாவானில் இன்று நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.