ஷா ஆலம், ஜூலை 24- சுவாசப் பிரச்னையை எதிர்நோக்கும் நோயாளிகளின் தேவைக்காக செர்டாங்கில் உள்ள கோவிட்-19 நோயாளிகளை தனிமைப்படுத்தும் மற்றும் சிகிச்சையளிக்கும் மையத்திற்கு (பி.கே.ஆர்.சி.) 3,000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தவிர, முழு கோவிட்-19 சிகிச்சைக்கான மருத்துவமனைகளாக தகுதி மாற்றம் செய்யப்பட்ட அம்பாங் மற்றும் செலாயாங் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙகடிமான் கூறினார்.
அம்பாங் மருத்துவமனையில் ரெகுலேட்டர் கருவிகளை மாற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது அதே சமயம் போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கைவசம் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
செலாயாங் மருத்துவமனைகளில் கட்டில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டு விட்டதாக நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
செலாயாங் மருத்துவமனையில் 960 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்துவதற்கான வசதிகள் உள்ளன. எனினும், கட்டில்களின் எண்ணிக்கை 1,200 ஆக அதிகரித்த காரணத்தால் ஆக்சிஜன் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது என்றார் அவர்.