ஷா ஆலம், ஆக 2- செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில அரசின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் இறுதி தொடங்கி இதுவரை 207,368 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி திட்டம் தொடர்பான விளக்கப் படத்தை தனது முகநூல் வாயிலாக பகிர்ந்து கொண்ட மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் மேலும் 45 லட்சத்து 80 ஆயிரம் பேர் தடுப்பூசி பெற்றுள்ளனர் என்றார். மாநிலத்தில் அந்நியத் தொழிலாளர்கள் மூலம் நோய்த் தொற்று பரவுவதை தடுப்பதற்காக செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டத்தின் கீழ் 20 லட்சம் தடுப்பூசிகளை தொழில் துறையினருக்கு மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இது தவிர, செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் வழி ஐந்து லட்சம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. சிலாங்கூர் மாநில அரசு சொந்த தடுப்பூசி திட்டத்திற்காக 20 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.