ஷா ஆலம், ஆக 16- அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவிடம் சமர்ப்பித்துள்ளதாக கைரி ஜமாலுடின் கூறினார்.
இதுநாள் வரை நாட்டிற்கு சேவையாற்ற தமக்கு வாய்ப்பு வழங்கியதற்காக தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது இண்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.
நாட்டிற்கு சேவையாற்ற எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்காக மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் அருள் நாட்டிற்கு கிட்டட்டும் என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கைரி ஜமாலுடின், அறிவியல் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சராகவும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சராவும் பதவி வகித்து வந்தார்.
பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து விலக டான்ஸ்ரீ மொகிடின் யாசின் முடிவெடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து அமைச்சரவை உறுப்பினர்களும் தங்கள் பதவியை துறக்க முன்வந்துள்ளனர்.
இன்று காலை புத்ரா ஜெயாவில் உள்ள பெர்டானா புத்ராவில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமையேற்ற பிரதமர், பின்னர் இன்று மதியம் மாட்சிமை தங்கிய பேரரசரை சந்திப்பதற்காக இஸ்தானா நெகாரா சென்றார்.
மாமன்னருடனான சந்திப்புக்குப் பின்னர் அவர் பிற்பகல் 12.23 மணியளவில் இஸ்தானா நெகாராவிலிருந்து வெளியேறினார்.