ஷா ஆலம், ஆக 30- ஹிஜ்ரா சிலாங்கூர் கடனுதவித் திட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உதவும் திட்டங்களுக்காக மாநில அரசு 10 கோடியே 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
கித்தா சிலாங்கூர் 1.0 மற்றும் கித்தா சிலாங்கூர் 2.0 திட்டங்களின் வாயிலாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
தொழில் முனைவோர் இயங்கலை வாயிலாக வருமானம் ஈட்டுவதற்கு வகை செய்யும் நோக்கில் 1 கோடியே 50 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டில் கோ டிஜிட்டல் திட்டம் கித்தா சிலாங்கூர் 1.0 உதவித் தொகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
இது தவிர, வருமானம் இழந்த நிலையில் வர்த்தகத்தின் வழி வருமானத்திற்கான புதிய வழியைத் தேடுவோருக்கு உதவும் நோக்கில் 1 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் “நாடி“ எனப்படும் நியாகா டாருள் ஏசான் திட்டம் அமல்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று ஹிஜ்ரா திட்டத்தில் கடனுதவி பெற்றவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து செமெந்தா உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு வறினார்.