ஷா ஆலம், செப் 2– கோல லங்காட் உத்தாரா பாதுகாக்கப்பட்ட வனத்தின் 46 விழுக்காட்டுப் பகுதியை சிலாங்கூர் மாநில அரசு நிரந்தர வனப்பகுதியாக தொடர்ந்து நிலை நிறுத்தும்.
அந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் 1,326.33 ஏக்கர் பகுதியை மட்டுமே மேம்பாட்டு நிலமாக தகுதி மாற்றம் செய்ய கடந்த மே மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது என்று மாநில வன இலாகாவின் இயக்குநர் டத்தோ அகமது ஃபாட்சில் அப்துல் மஜிட் கூறினார்.
இந்த நிலத்திற்கு மாற்றாக இரு வெவ்வேறு இடங்களில் 1,436 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக ஒதுக்குவதற்கும் அங்கீகாரம் தரப்பட்டதாக அவர் சொன்னார்.
சபாக் பெர்ணம் மாவட்டத்தில் சுங்கை பாஞ்சாங்கில் 762.29 ஏக்கர் நிலமும் கோல லங்காட் மாவட்டத்தின் புக்கிட் புரோகா பகுதியில் 557.86 ஏக்கர் நிலமும் உலு சிலாங்கூர், அம்பாங் பெச்சா துணை மாவட்டத்தின் பூலோ தெலுர் பகுதியில் 516.40 ஏக்கர் நிலமும் இந்நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்டது என்றார் அவர்.
அதே சமயம் கோல லங்காட் உத்தாரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் எஞ்சியுள்ள 46 விழுக்காட்டு பகுதியை மாநில அரசு தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக நிலை நிறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வீடமைப்பு உள்ளிட்ட கலவையான மேம்பாட்டுத் திட்டங்களுக்காக கோல லங்காட் உத்தாரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் ஒரு பகுதியை பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பை மாநில அரசு கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி வெளியிட்டது.