ஷா ஆலம், செப் 28- தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சிலாங்கூர் நுழைந்துள்ளதால் மாநிலத்திலுள்ள சுற்றுலா மையங்களுக்கு வருகையளிக்கும்படி பொதுமக்களை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நலிவடைந்திருக்கும் சுற்றுலாத் துறைக்கு புத்துயிரளிப்பதற்கு பொதுமக்களின் ஆதரவு மிகவும் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.
சிலாங்கூர் தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு நுழைந்துள்ளது. அதே சமயம், சமுதாயத்தில் பெரும்பாலோர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு வருகையளிப்பதன் மூலம் அத்துறையின் மீட்சிக்கு உதவ முடியும் என்றார் அவர்.
சிலாங்கூர் மக்களின் உதவி கிட்டும் பட்சத்தில் சுற்றுலாத் துறைக்கு மீண்டும் உயிரூட்ட இயலும். ஆகவே, மாநிலத்திலுள்ள சுற்றுலா மையங்களுக்கு மறவாமல் வருகை தாருங்கள் என அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சிலாங்கூர் மாநில மற்றும் மலேசிய சுற்றுலாத் துறையினருக்கு அமிருடின் தனது டிவிட்டர் பதிவின் வழி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.